×

சிதம்பரம் நடராஜர் கோயில் கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் பிரம்மோற்சவம் நடத்தும் முடிவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு: சிறப்பு அமர்வுக்கு விசாரணை மாற்றம்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கை கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்திருக்கிறது. இந்த விஷ்ணு கோயிலில் மே 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடத்துவதற்கு அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், 400 ஆண்டுளுக்கு இந்த கோயிலில் பிரம்மோற்சவம் எதுவும் நடத்தப்படவில்லை. இதுவரை இல்லாத நடைமுறையை புதிதாக செயல்படுத்துகின்றனர். நடராஜர்தான் இந்த கோயிலின் பிரதான தெய்வம் என்பதால் கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு பிரம்மோற்சவம் நடத்த முடியாது என்று வாதிடப்பட்டது. அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், பக்தர்கள் விருப்பம் காரணமாக பிரம்மோற்சவம் நடத்தப்படுவதாக கோவிந்தராஜ பெருமாள் கோயில் அறங்காவலர்கள் தாக்கல் செய்திருக்கும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து, பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த இந்த வழக்கை, கோயில்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வுக்கு மாற்றிய தலைமை நீதிபதி அமர்வு, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்துள்ளது.

The post சிதம்பரம் நடராஜர் கோயில் கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் பிரம்மோற்சவம் நடத்தும் முடிவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு: சிறப்பு அமர்வுக்கு விசாரணை மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Court ,Brahmotsavam ,Chidambaram Nataraja Temple ,Govindaraja ,Perumal ,CHENNAI ,Chief Justice ,Madras High Court ,Govindaraja Perumal ,Chidambaram ,Nataraja… ,Govindaraja Perumal Sannadi ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள...